விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடி இனத்தவர் உட்பட எட்டு விதத் தோற்றங்களில் நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசரில் விஜய் சேதுபதி பேசும், **“ராமனும் நான்தான்… ராவணனும் நான்தான்”** என்கிற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தில் இடம்பெறும் `ஏ..எலும்ப எண்ணி எண்ணி’ லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு கார்த்திக் நேத்தா வரிகளைத் தந்துள்ளார். இப்பாடலுக்கான ராப் வரிகளை எம்.சி.விக்கி எழுதியுள்ளார். இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகள் பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக இருந்தாலும் சமகால அரசியலையும் பேசும் விதமாக உள்ளது.
ஆட்டுக்குட்டி முதல் ஏரோபிளேன் வரை ஆட்டயப் போடுவேன்டா…
விஜய்மல்லையா பணத்தை கொள்ளையடிச்சு ஊருக்கு போடுவேன்டா…
ஆஃபர் பல கொடுத்து புடுங்கும் கார்ப்ரேட் திருடங்க நாங்க இல்ல..
பள்ளிக்கூடம் காலேஜ்னு பேர் வச்சு கொள்ளை அடிக்கிறது நாங்க இல்ல..
வெள்ள வேட்டி வெள்ள சட்டை போட்டு ஓட்டு திருடுற கூட்டம் நாங்க இல்ல..
சட்டத்தில ஓட்டயப் போட்டு சோத்த புடுங்கிற கூட்டமில்ல..
என்பன போன்ற வரிகளில் அரசியல் நய்யாண்டி அதிகமாய் இடம்பெற்றிருக்கிறது. அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ் மற்றும் 7சி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
[ஏ..எலும்ப எண்ணி எண்ணி லிரிக்கல் வீடியோ](https://youtu.be/GRadOjRR4qk)�,