அழிந்துவரும் கிராமங்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘உளிரி’.
இயக்குநர் ஆர். ஜெயகாந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உளிரி. இந்தப் படத்தில் சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகச் சயனி நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படம் குறித்து இயக்குநர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்றுப்படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன் இனமே இன்று அழிக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்லாமல் நமது வாழ்வியல் பண்பாட்டின் பல கூறுகள் அழிக்கப்பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று காணப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
“அவை தன்னுடைய இயல்பைத் தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மைப் பொலிவை இழந்து காணப்படுகின்றன. நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்தக் காதல் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நம் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.�,