மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 6ஆம் தேதி மான்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது. போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகளின் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் குண்டுகள் பாய்ந்து ஆறு விவசாயிகள் இறந்துள்ளனர். இதனால் அங்கு போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக வன்முறையைக் கட்டுப்படுத்தக் கூடுதல் படைகளை அனுப்புமாறு மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் விவசாயிகளின் விளைபொருள்களை வாங்க நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மத்தியப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு முறையே ரூ.5,225, ரூ.5,000 மற்றும் ரூ.5,050 என ஆதார விலை நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெங்காயத்தைக் கிலோ ரூ.8-க்கு வாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.
�,