�
ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்த பன்னீர் அணியினர் ஜெயலலிதாவின் மாதிரி பொம்மையை சவப்பெட்டியில் வைத்து வாக்கு சேகரித்த சம்பவம் அனைத்துக் கட்சிகளின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.
மக்கள் இன்னும் ஜெயலலிதாவின் மரணத்தை மறக்கவில்லை. ஆதலால் இதை வைத்தே மக்களிடம் சென்றால் நமக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். சவப்பெட்டியை வைத்து வாக்குக் கேட்டால் அனுதாப வாக்குகளை அள்ளலாம் என மாஃபாபாண்டியராஜன் தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். இதன் பின்னணியில் ஒரு பத்திரிகையாளர் இருந்திருக்கிறார். அவர் சொன்ன ஆலோசனையின் படிதான் மாஃபா பாண்டியராஜன் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் பிரச்னை இப்போது அவர்களுக்கு எதிராகவே திசை திரும்பியிருக்கிறது. இதனால் பன்னீர் செல்வத்தின் அணியிலிருக்கும் பல்வேறு நபர்களும் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். பன்னீர் செல்வமும் மாஃபா மீது நடவடிக்கை எடுக்கமுடியாமல் திணறி வருகிறார்.
இந்த நிலையில் தேசியக் கொடியை அவமதித்துவிட்டதாக மாஃபா பாண்டியராஜன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாலை ஆறு மணியாகிவிட்டாலே அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடியை கொடிக்கம்பத்திலிருந்து இறக்கி விடுவார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொடியை பன்னீர் செல்வத்தின்அணியினர் அவமதித்துவிட்டனர். இதனால் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்லப் போவதாக தினகரன் அணியினர் முடிவெடுத்துள்ளனர்.�,