அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாகக் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முழு ஆண்டு மதிப்பெண்கள் போடப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள், வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.இந்த கல்வியாண்டும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், கிராமப்புற மாணவர்கள் உரிய இணைய வசதி இல்லாததால் வகுப்பில் கலந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு எப்போது நடத்தப்படும், நேரடியாக வகுப்பில் நடத்தப்படுமா அல்லது ஆன்லைனில் நடத்தப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலிருந்து எழுந்தது.
இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 16) கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பதிலளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம். தேவையெனில் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன. ஒரு சில பள்ளிகளில் அதிகளவிலான மாணவர்கள் இருப்பதால் கூடுதல் கழிப்பறைகள் தேவைப்படுகிறது. முன்னதாக பள்ளிகள் கட்டப்பட்ட போது, வளாகத்திலிருந்து வெளியே கழிப்பறைகள் கட்டப்பட்டன, ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களிலும் கழிப்பறை வசதிகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.
**-பிரியா**�,