இது மழைக்காலமா, குளிர்காலமா என்று பிரிக்கமுடியாத சூழ்நிலையில் ‘சூடா ஏதாச்சும் சாப்பிடலாமே’ என மனம் தேடும். இப்படிப்பட்டநேரத்தில் நாம் சாப்பிடும் உணவு, சத்துள்ளதாகவும் தற்போது பரவும் நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைவது அவசியம். அதற்கு இந்த வாழைப்பூ சீரகக் கஞ்சி உதவும்.
**என்ன தேவை?**
வாழைப்பூ இதழ் – 15
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சீரகச்சம்பா அரிசி – கால் கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை – சிறிது
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
**எப்படிச் செய்வது?**
வாழைப்பூவைக் காம்பு நீக்கி, நறுக்கி மோரில் போடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், இஞ்சித் துருவல், வாழைப்பூ (மோரிலிருந்து எடுத்துப் பிழிந்து) சேர்த்து வதக்கி, அரிசி, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இந்தக் கஞ்சியைச் சுடச்சுடக் குடிக்கலாம். மழைக்கும் குளிருக்கும் இதமாக இருக்கும்.
[நேற்றைய ரெசிப்பி: தக்காளி சாஸ் – நல்லதா? கெட்டதா?](https://www.minnambalam.com/k/2019/12/01/83)
�,