�இரட்டை மின்கம்பம் சின்னத்தை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. தினகரன் அணியினர்தான் அதிமுக கட்சிப்பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸிற்கு விளக்கம் அளித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதன்.
இரட்டை மின்கம்பத்தை, இரட்டை இலைபோல பச்சை நிறத்திலும், இலை போன்ற வடிவத்தையும் வாக்காளர்களிடம் தவறாக கொண்டுசெல்வதாக தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி.தினகரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
டி.டி.வி.தினகரன் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதையடுத்து, மதுசூதனன் சார்பில் தேர்தல் கமிஷனிடம் ஏப்ரல் 3ஆம் தேதி இன்று விளக்கக் கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் இரட்டை மின்கம்பம் சின்னத்தை நாங்கள் தவறாகப் பயன்படுத்தவில்லை. டி.டி.வி.தினகரன்தான் அதிமுக கட்சிப் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக, அவருடைய அணி சமூக வலைதளங்களில் இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுக கட்சி பெயரையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் இணைத்து வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் கோரும்பட்சத்தில் வேட்பாளர் மதுசூதனன் நேரில் வந்து விளக்கம்தரத் தயாராக இருப்பதாகவும் ஓ.பி.எஸ். அணி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுசூதனன் கொடுத்திருக்கும் புகாரை விசாரிக்க தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் ஆயத்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.�,