இரட்டை இல்லை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரில், சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையத்துக்கு, பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலமாக ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனைக் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவு டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி. தினகரனைக் கைது செய்தனர். அவரைச் சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூன், ஹவாலா தரகர் நரேஷ், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணைக்குப் பின் நீதிமன்றக் காவலில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றக் காவல் முடிந்ததையடுத்து, கடந்த 15ஆம் தேதி சிறையில் இருக்கும் தினகரன் காணொலிக் காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது அவரது காவலை வரும் 29-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஜாமீன் கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மே 17ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். அதையடுத்து, தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை வருகின்ற மே 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்குத் தொடர்பாகத் தொலைபேசி உரையாடலின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக டி.டி.வி. தினகரன், சுகேஷ் இருவரின் குரல் பதிவுகளைச் சி.பி.ஐ. தடயவியல் மையத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் குற்றப்பிரிவு போலீசார் கடந்த மே 11ஆம் தேதி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் வழக்கறிஞர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வருகிற மே 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டபோது, தினகரன், சுகேஷ் சந்திரசேகரின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்யக் காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.�,