இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, நாகேஷ், நாசர் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவையான கதைக்களம் கொண்ட இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என தலைப்பிடப்பட்டு மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்தார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகளில் வடிவேலுக்கும் படக்குழுவுக்கும் மனகசப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றுபோனது. இதனால் தயாரிப்பாளருக்கு நிதியிழப்பும் ஏற்பட்டது.
இந்த பிரச்சினையை ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் எடுத்துச்சென்றார். தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்ததாக செய்திகள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் அளித்த பேட்டியில், தான் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.
தற்போது இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருக்கும் யோகி பாபு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 10 படங்களில் அவர் நடித்துள்ளார். எனினும், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிப்பாரா அல்லது யோகி பாபு நடிப்பாரா என்பது குறித்த தெளிவான தகவல்களை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.�,