ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ – ஜியோ, ‘ஊழியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டுவர வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்படி மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்முன், 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அந்தவகையில், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் சாலைமறியலிலும் இன்று அவர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, செப்.30ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜாக்டோ – ஜியோ அமைப்பினரிடம் தெரிவித்திருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர் . இதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு தரப்பினர் கலந்துகொள்ளவில்லை. சென்னை எழிலகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாவரம், சேப்பாக்கம் உட்பட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றன
ஈரோட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இதையடுத்து, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 முதல் 40 சதவிகித அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் வேலூர் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.�,