2017ஆம் ஆண்டு முழுவதும் குன்னூர் தேயிலை வர்த்தகர் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட தேயிலை விற்பனை ஏலங்கள் அனைத்தும் அதிக விற்பனை மற்றும் அதிக வருவாயுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு நிறைவு பெறும் சூழலில் உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடைசி இரண்டு வாரங்களுக்கான ஏலங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்கான முதல் ஏலம் ஜனவரி 4ஆம் தேதி தொடங்குகிறது. 2017ஆம் ஆண்டுக்கான கடைசி ஏலத்தில் தேயிலையின் விலை சராசரியாக 84.21 ரூபாயாக இருந்தது. இது அதற்கு முந்தைய வார ஏல விற்பனை விலையை விட 2 ரூபாய் அதிகமாகும். மேலும் அது இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த ஏல விற்பனை விலையை விட 6 ரூபாய் அதிகமாகும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் அதற்கு முந்தைய வார ஏல விலையை விட அதிக விலைக்கே தேயிலை விற்பனையாகியுள்ளது.
இவ்வாண்டின் கடைசி வாரம் நடந்த ஏல விற்பனை விலையானது அதற்கு முந்தைய ஏழு மாதங்களின் ஏல விலையை விட அதிகபட்சமாகும். ஏற்றுமதியும் சிறப்பாகவே இருந்ததால் ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்ட மொத்த தேயிலையில் சுமார் 90 சதவிகிதம் விற்றுத் தீர்ந்துள்ளது. இவ்வாண்டின் கடைசி வார விற்பனை வாயிலாகக் கிடைத்த விற்றுமுதல் ரூ.11.06 கோடியாக உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் அது ரூ.9.52 கோடியாக மட்டுமே இருந்தது. எனவே 16.18 சதவிகிதம் கூடுதலான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனவே தேயிலை உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் 2018ஆம் ஆண்டை எதிர்நோக்கியுள்ளனர்.�,