வறட்சியால் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் செய்வதற்கு வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள்ளாகும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்துவருகின்றன. இதனால், தமிழக விவசாயிகள் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தலைநகர் டெல்லி சென்று, 41 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியிருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 25ஆம் தேதி திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருநாள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய பாதுகாப்பை வலியுறுத்தி, ஏப்ரல் 26ஆம் தேதி புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை மாணவர்கள் மேற்கொண்ட 10 நாள் சைக்கிள் பயணத்தை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார்.
இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பினை வலியுறுத்தினர். இந்த சைக்கிள் பயணம் புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலிருந்து தொடங்கியது.
அப்போது, சைக்கிள் பயணத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த சைக்கிள் பேரணி பயணம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த பயணத்தில் 1,158 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க உள்ளோம். இந்த பயணத்தின் போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்வோம் என்று கூறினார்கள்.�,