குஜராத் தேர்தலில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கையசைத்தவாறே நடந்து சென்றார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
குஜராத்தில் நேற்று (டிசம்பர் 14) இரண்டாம்கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானது. டிசம்பர் 9ஆம் தேதி நடந்த முதல்கட்டத் தேர்தலில் 67 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தலின்போது பதிவான 71.32 சதவிகிதத்தைவிட, இது குறைவாகும்.
முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரனிப் என்ற இடத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு வரிசையில் நின்றவர், வந்திருந்தவர்களிடம் சகஜமாகப் பேசினார். சிலர், அவரை செல்போனில் படமெடுத்தனர்.
வாக்களித்துவிட்டு வெளியேவந்த மோடி, அங்கு கூடி நின்றவர்களைப் பார்த்து மையிட்ட விரலைக் காட்டினார்; சிறிது தூரம் நடந்தார்; காரில் ஏறிய பின்பும் கையசைத்தவாறே பயணம் செய்தார். “இது, வாக்குச்சாவடியில் நின்றுகொண்டு வாக்கு கேட்பது போலுள்ளது” என்று குற்றம்சாட்டினார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா.
இதுதொடர்பாக, டெல்லியிலுள்ள தேர்தல் ஆணையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடி ஊர்வலமாகச் சென்ற விவகாரத்தில் அகமதாபாத் மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
“டெல்லி தொலைக்காட்சியில் ராகுல் காந்தி அளித்த பேட்டி, குஜராத்தில் ஒளிபரப்பானது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்ற தேர்தல் ஆணையம், வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ராகுல் விளக்கமளிக்க வேண்டுமென்றது. ஆனால், தேர்தல் விதிகளை புறந்தள்ளிவிட்டு பிரசாரம் செய்வது போல மோடி ஊர்வலம் செல்லும்போது மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது. இது பாரபட்சமான செயல்பாடு” என்று குற்றம்சாட்டுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
�,