சிகாகோ, ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். இங்கு, வணிகம்,தொழில் என அனைத்தும் சிறப்புடன் விளங்குகிறது. சிகாகோவில் 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற சிறப்புகளினால் சிகாகோ அமெரிக்காவின் ‘இரண்டாம் நகர்’ என்றழைக்கப்படுகிறது. மேலும், குறுகிய காலத்திலே நாட்டின் மிகச் சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சியடைந்தது.
சிகாகோவுக்கு சுமார் 4.42 கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இத்தனை சிறப்புகளை கொண்ட சிகாகோ 1920-1930 காலகட்டங்களில், உலகின் மிகப்பெரிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும், ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவிலேயே சிகாகோவில் கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகாகோவில் கடந்த ஆண்டுகளில் நடந்த கொலைகளை விட 2016 ஆம் ஆண்டு அதிகளவில் கொலை நடந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துப்பாக்கி சூடும் நடக்கும் நகரமாக மாறி வருகிறது.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டில் கொலை குற்றங்களின் எண்ணிக்கை 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தையை ஆண்டைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 4,331 பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 762 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வந்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
சமீபத்தில், 6 வயது சிறுவன் துப்பாக்கி வைத்து விளையாடும்போது, 3 வயது சிறுவன் மீது எதிர்பாரதவிதமாக துப்பாக்கி பட்டு அச்சிறுவன் உயிரிழந்தார். இதில்,சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,