�பி.டி. பருத்தி விதைகளில் சட்டவிரோதமான, ஒப்புதல் வழங்கப்படாத மரபணுக்கள் இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் குறித்துத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், ஐந்து விதை நிறுவனங்கள்மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விதை நிறுவனங்கள்மீது ஏற்கெனவே நாக்பூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண் துறைச் செயலாளரான பிஜய் குமார் ‘பிசினஸ் லைன்’ இதழிடம் பேசுகையில், “மத்தியப் பருத்தி ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சட்டவிரோதமான மரபணுக்கள் குறித்து மாநில உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இப்பிரச்னையை உள்துறை அமைச்சகம் சி.பி.ஐயிடம் எடுத்துச்செல்லும். சட்டவிரோதமான மரபணுக்கள் கொண்ட விதை மூட்டைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால், எந்தெந்த நிறுவனங்கள் இப்பிரச்னையில் சிக்கியுள்ளன என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. யவத்மல் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்பட்ட துயரச் சம்பவத்துக்குப் பிறகு மத்தியப் பருத்தி ஆராய்ச்சிக் கழகம் ஓர் ஆய்வை நடத்தியது என்றும் அதன் ஆய்வறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.�,