�
பிரதமரின் தொழிலாளர் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 1.5 கோடிப் பேர் பயன்பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு, வேலைவாய்ப்பு வழங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் ‘பிரதான் மந்திரி ரோஜ்கார் புரோத்சாஹன் யோஜனா’ திட்டம் மத்திய மோடி அரசால் 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் அரசு தரப்பிலிருந்து ரூ.3,648 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் மத்திய தொழிலாளர் துறை அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 8ஆம் தேதி நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நூற்றாண்டுக் கொண்டாட்ட விழாவில் இந்த விவரங்களை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இடைக்கால பட்ஜெட்டில் ரிக்ஷாகாரர்கள், சிறு கடைக்காரர்கள், வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த சுமார் 3 கோடிப் பேர் பயன்பெற்றுள்ளனர். ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்களால் வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் விளைவுகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து *சர்வதேச வேலை எதிர்கால ஆணையம்* தனது பரிந்துரைகளை வழங்குகிறது” என்றார்.�,