பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்குப் பதிப்பின் இரண்டாம் பாகத்தை நானி தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், இந்தியைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே அதிகமான பார்வையாளர்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தெலுங்கில் முதல் பாகத்தை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அவர் பணியாற்றிய முதல் சின்னத்திரை நிகழ்ச்சி அதுவாகும். நாகார்ஜுனா, சிரஞ்சிவி ஆகியோர் வாங்கிய சம்பளத்தை எல்லாம் முறியடித்து ஒரு எபிசோடுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று சின்னத்திரை வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகராகத் திகழ்ந்தார்.
ஜூனியர் என்டிஆரின் மனைவி கருவுற்றிருப்பதால் அவரோடு நேரம் செலவிட வேண்டும் என்பதால் இரண்டாம் பாகத்தில் அவர் பங்கேற்கவில்லை என இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானி இந்தப் பாகத்தைத் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கு சின்னத்திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவான நிகழ்ச்சி பிக்பாஸ்தான். 10,000 சதுர அடி பரப்பில் மிகப் பெரிய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. 750 பேர் பணியாற்றினர்.�,