29 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து கோவா சென்று கொண்டிருந்த பேருந்து கர்நாடகத்தில் ஒரு சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 29 பயணிகளுடன் கோவா நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேற்று இரவு கிளம்பியது. இந்த பேருந்து இன்று அதிகாலை கர்நாடக மாவட்டம் கல்புர்கியில் எதிரே வந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்து சில நொடிகளிலேயே தனியார் பேருந்தில் தீ பிடித்தது. இந்த தீ வேகமாக பரவி தனியார் பேருந்து தகதகவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. இந்நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். இந்த விபத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தனியார் பேருந்து தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்களால் முயன்ற வரை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த 22 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் தற்பொழுது கல்புர்கியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பிய 22 பயணிகளும் தீவிர சிகிச்சையில் உள்ளனர் ஆனால் யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.