tமுதன் முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட்!

public

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியானது சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் மிக முக்கியமானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

உக்ரைன்-ரஷ்யா போர் சூழ்நிலை காரணமாக ஒலிம்பியாட் 2022 செஸ் போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வரின் சீரிய முயற்சியால், தமிழ்நாடு அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது. இந்த ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முதல்வர் அலுவலகத்தை அணுகிய சில மணிநேரங்களில் அனைத்து ஒப்புதல்களையும் அரசு வழங்கியது.

1927ஆம் ஆண்டு முதல் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெற வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் 44ஆவது போட்டி சென்னையில் நடப்பதில் தமிழ்நாடு அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இந்த போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 2,000 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும். தமிழ்நாடு அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் எனப் பல்வேறு வழிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. முன்னதாக இந்த போட்டிகளில் தங்கம், வெண்கலம் வென்ற தமிழ்நாட்டின் 14 வீரர்களுக்கு கடந்தாண்டு தமிழ்நாடு அரசு ரொக்கப் பரிசு ரூபாய் 1 கோடியே 98 லட்சம் வழங்கி சிறப்பித்தது.

இதுபோன்ற ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத், உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர். இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகள் உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8 2022 வரை நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் செஸ் தலைநகரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ராஜா, ராணிகளையும் சென்னை அன்புடன் வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

43வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *