கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி துறையூர் கிராமத்தில் செஞ்சுரி என்ற தனியார் பட்டாசு ஆலையை, கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதில், அந்த அறை இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதில் அந்த கட்டிடத்திலிருந்த ராமர் , தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் பிரபாகரன், மேலாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர்கள் திருநாவுக்கரசு, சூசை மிக்கேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(பிப்ரவரி 25) தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
**-வினிதா**