நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யுமாறு டிஜிபியிடம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் சுதா புகார் அளித்துள்ளார்.
நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அவமதிக்கும் விதமாகப் பேசிய ஹெச்.ராஜா மீது திருமயம் இன்ஸ்பெக்டர் மனோகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட எட்டு பேர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 16) சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவரும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினருமான சுதா, ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, அரசு ஊழியர்கள், பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தடுத்ததோடு மட்டுமில்லாமல் காவல் துறையையும், நீதிமன்றத்தையும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். வாக்குவாதத்தின்போது ஹெச்.ராஜா பிரயோகித்த வார்த்தைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “காவல் துறையினருடனான ஹெச்.ராஜாவின் பேச்சு என்பது மதத்தின் அடிப்படையில் இரு வேறு சமூகங்களிடையே கலவரத்தைத் தூண்டும் உள்நோக்கம் கொண்டதாகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. காவல் துறையினருக்கு எதிராகவும், நீதித் துறைக்கு எதிராகவும் மிகவும் தரம் தாழ்ந்த அநாகரிகமான வார்த்தைகளை ஹெச்.ராஜா கையாண்டுள்ளார். எனவே அவர் மீதான என்னுடைய புகாரை ஏற்றுக்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.�,