அதிமுகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் பாமக தலைமை மீது அதிருப்தியாகி உடனடியாக பல பேர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள். நடிகர் ரஞ்சித், ராஜேஸ்வரி பிரியா போன்றோர் அப்போதே விலகிய நிலையில் இன்று (ஏப்ரல் 10) பாமகவில் இருந்து விலகியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவரான பொங்கலூர் மணிகண்டன்.
அவரிடம் பேசியபோது,
“பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைகளை வடிவமைத்து டாக்டர் ராமதாஸ் இதுவரை பல புத்தகங்கள் போட்டிருக்கிறார். நான் பாமகவில் சேரும்போது அந்த புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். அதில் திமுக, அதிமுகவை கடுமையாகத் தாக்கி பல கருத்துகள் இடம்பெற்றிருந்தன. அதுதான் பாமகவின் சாசனம். ஆனால், அந்த சாசனத்தை நான் எரித்துவிடட்டுமா? தலைமை முடிவெடுத்துவிட்டதே என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பரப்புரைக்கு செல்லும் இடங்களில், ‘எவ்வளவு ரூபா வாங்கிட்டு கூட்டணிவச்சீங்க?’ என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவு கேட்கிறார்கள். அதனால் அவசரப்பட்டு அல்ல நன்கு யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்” என்றவரிடம்,
“ராமதாஸ் உங்களிடம் மிகவும் பாசமாக இருப்பாரே?” என்று கேட்டோம்.
“இன்றளவுக்கும் டாக்டர் ராமதாசை நான் மதிக்கிறேன். 2014 கூட்டணியும் சரி, இப்போதைய கூட்டணியும் சரி அன்புமணி விருப்பத்தின் பேரில் ராமதாஸின் விருப்பத்துக்கு மாறாக அமைக்கப்பட்டது. வேறு வழியின்றி இதை ஆதரித்து ராமதாஸ் பேசிக் கொண்டிருக்கிறார். 2014 கூட்டணியே அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அப்போது அவர் அன்புமணியைத் தவிர யாருக்கும் பரப்புரை செய்யவில்லை. இப்போது கூட அவரை வற்புறுத்தி பரப்புரைக்கு வரவழைத்திருக்கிறார்கள். பார் உள்ளளவும், கடல் நீர் உள்ள அளவும் என்ற வசனத்தை என்னிடம் பல முறை ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அவர் இந்தக் கூட்டணி முடிவை எடுக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார். சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் ராமதாஸ். நாங்களும் சூழ்நிலைக் கைதியாக இருக்க விருப்பமில்லை. அதனால் நானும் என் ஆதரவாளர்களும் விலகிவிட்டோம். அடுத்தகட்டத்தை விரைவில் அறிவிப்பேன்” என்றார் பொங்கலூர் மணிகண்டன்.�,