புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்யப்பட்ட மூன்று நோயாளிகள் திடீர் மின்தடையால் மரணமடைந்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள், மனிதர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்கள் அதிகரித்து கிட்னி பாதிப்பால் மரணமடைந்துவருகிறார்கள். பலர் தனியார் மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் செய்து வருகிறார்கள், அப்படி தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொண்டு நீண்டகாலம் உயிர் வாழ முடியுமா என்பது கடினம்தான். அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் உயிர் வாழ்வது கடினம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொகுதியான கதிர்காம்பத்தில் வசிக்கும் அம்சா, சுசிலா, கணேசன் என்ற மூன்றுபேர் கிட்னி பாதிப்பால், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துவந்தார்கள். இன்று டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தபோது திடீரென மூவரும் மரணமடைந்தனர்.
மின்சாரம் தடைபட்ட காரணம்தான் அதற்கு காரணம் என சிலர் சொல்கிறார்கள். நாம் விசாரித்ததில், டயாலிசிஸ் செய்யும்போது, மின்சாரம் தடைபட்டாலும் அந்த மிஷினை கையால் சுற்றலாம். அப்போது ரத்தம் உறையாமல் இருக்க ஊசி ஒன்றும் போடப்படும். அதை போடாமல் இருந்திருக்கலாம். இந்த மூன்றுபேர் மரணத்துக்கு காரணம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் கவனக்குறைவுதான் என்கிறார்கள் சிலர்.
இதனால் உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் உயிரிழந்த மூன்று குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மருத்துவத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.�,