நீட் உள்ளிட்ட தேர்வுகளை இணையத்தில் நடத்துவது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியப்படாது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இத்தேர்வில் முதன்முறை பங்கேற்ற மாணவர்கள் அடுத்த முறையும் பங்கேற்கலாம். இரு தேர்வுகளில் எது சிறந்த மதிப்பெண்ணோ அது கணக்கிடப்படும். எழுத்துத் தேர்வாக இல்லாமல் கணினி தேர்வாக நடத்தப்படும். இனி, அனைத்துத் தேர்வுகளும் கணினி முறையில் நடைபெற உள்ளது. கணினி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 8) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “நீட் உள்ளிட்ட தேர்வுகளை இணையத்தில் நடத்துவது என்பது குறித்து உத்தேசமாகத்தான் கூறியுள்ளனர். இன்னும் உத்தரவாக வரவில்லை. ஆனால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்பதுதான் எனது கருத்து. மனிதவள மேம்பாட்டு நிபுணராக எனக்குத் தெரிந்து ஐஐஎம் தேர்வுகளை இணையத்தில் எழுத வைக்கும் முயற்சி என்பது மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது. ஐஐஎம் தேர்வுகளை 5 லட்சம் பேர் எழுதுகின்றனர். நீட் தேர்வுகளை அதைவிட அதிகமானோர் எழுதுகின்றனர். எனவே கணினி முறையில் தேர்வு நடத்துவது என்பது இந்தியாவில் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாது” என்று தெரிவித்துள்ளார்.�,