டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ரிசல்ட் கவலை; ஆறுதல் சொன்ன மோடி

public

அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது. சில நிமிடங்களில் மெசேஜ் வந்தது.

“மக்களவைத் தேர்தல் முடிவு நாளை (மே 23) வெளிவர இருக்கும் நிலையில் டெல்லியில் மே 21 ஆம் தேதி இரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்தது. அனேகமாக தமிழகத்தில் இருந்துதான் அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்டிருப்பார்கள் என்ற அளவுக்கு தமிழக தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, வேலுமணி என அதிமுகவினர் கலந்துகொள்ள பாமக சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி, தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ், தமாகா சார்பில் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார், ஏ.சி. சண்முகம், தனபாலன், ஜான் பாண்டியன் என்று தமிழகத்தில் இருந்து தேஜகூ தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அசோகா ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டதால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வட்டமேஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் எல்லா மாநில உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா முதலில் பேசினார். பின் பிரதமர் மோடி எழுந்து ஒவ்வொரு வட்ட மேஜையாக வந்து ஒவ்வொரு மாநில கூட்டணிக் கட்சித் தலைவர்களை வணங்கி கைகொடுத்தார்.

அந்த வகையில் தமிழக மேஜைக்கு வந்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் எழுந்திருக்க முயல, அவர்களை கையமர்த்தி அமரச் சொன்னார் பிரதமர். மேஜையை சுற்றி வந்து ஒவ்வொரு தலைவராக வந்து கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். பிரதமரோடு அந்தந்த மாநில மொழியறிந்தவர் மொழிபெயர்ப்பாளராக பக்கத்தில் நின்றிருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி சிரித்தபடி மோடியிடம் சில வார்த்தைகள் பேசினார். ஓ.பன்னீர் செல்வம் மோடியிடம் எதுவும் பேசவே இல்லை. கை கொடுத்ததோடு சரி.

அதன் பின் மோடி ஆங்கிலம் கலந்த இந்தியில் சில நிமிடங்கள் தமிழக தலைவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அதை மொழிபெயர்ப்பாளர் தமிழில் கூறினார். அப்போது மோடி, ‘வந்திருக்கிற எக்சிட் போல் முடிவுகளை மட்டும் வைத்து நான் சொல்லலை. பிரதமர் என்ற முறையில எனக்கு வந்திருக்கிற எல்லா ரிப்போர்ட்டுமே நமக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு. நாம்தான் மறுபடியும் ஆட்சி அமைக்கப் போறோம். அப்படி ஒருவேளை ஏதாவது மாற்றம் நடந்து நாம ஆட்சி அமைக்குறதுக்கு சில மாநிலக் கட்சிகளோட உதவி தேவைன்னா அதையும் கேட்டுப் பெறுவோம். அதனால் யாருக்கும் எந்த கவலையும் வேணாம். நீங்க தேர்தல்ல கொடுத்த ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி. கூடிய சீக்கிரமே நாம சக்கஸ் மீட் ஏற்பாடு பண்ணி அந்த நிகழ்ச்சில சந்திப்போம்’ என்று பேசியிருக்கிறார் மோடி.

அப்போது எடப்பாடி குறுக்கிட்டு, ‘இந்தியா முழுசும் நம்ம கூட்டணிக்கு நல்லா இருக்குனு எக்சிட் போல் சொல்றாங்க. ஆனா எல்லாருமே தமிழ்நாட்ல அதுக்கு நேர் மாறா சொல்லியிருக்காங்களே. கவனீச்சீங்களா?’எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு மோடி, ‘நீங்க கவலைப்படாதீங்க. கவனித்தக்க அளவுக்கு நாம தமிழ்நாட்ல சீட் வாங்குவோம். அதனால அதைப் பத்தி நீங்க எதுவும் நினைக்காதீங்க’ என்று எடப்பாடியின் தோளில் கைகளை வைத்து ஆறுதல் சொன்னார். சுமார் ஆறு முதல் ஏழு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த மோடியோடு, சரத்குமார் செல்ஃபி எடுக்க முயல, வாருங்கள் எடுப்போம் என்று அவரை எழுப்பி செல்ஃபி எடுத்துக்கொண்டார் மோடி. மீண்டும் எல்லோருக்கும் கை கொடுத்து வணங்கிவிட்டு அடுத்த ரவுண்ட் டேபிளுக்கு சென்றார் மோடி. இவ்வாறு ஒவ்வொரு டேபிளாக சென்று ஒவ்வொரு மாநில கூட்டணிக் கட்சியினரோடும் ஆசுவாசமாக அளவளாவினார் மோடி.

விருந்து முடிந்ததும் இரவு டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்குத் திரும்பிவிட்டார் முதல்வர் எடப்பாடி. ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமோ அதே அசோகா ஓட்டலிலேயே ஏற்கனவே அறை முன் பதிவு செய்து வைத்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டார். விருந்து முடிந்ததும் பாஜக தலைவர்களுடன் ஓ.பன்னீர் தனியாக சந்திப்பு ஏதும் நடத்தியிருக்கலாம் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில். தமிழ்நாட்டின் நிலைமை பற்றி, ‘கவலைப்படாதீங்க கவனிக்கத் தக்க அளவுக்கு நாம வருவோம்’ என்று மோடி சொன்ன விஷயத்தை, விருந்து முடிந்து தமிழ்நாடு இல்லம் திரும்பிய எடப்பாடி அங்கிருந்த தளவாய் உள்ளிட்டவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்” என்ற மெசேஜை செண்ட் செய்தது வாட்ஸ் அப். இதை ஷேர் செய்துகொண்டு ஃபேஸ்புக் சைன் அவுட் ஆனது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமித் ஷா பேரம்… ஆடிப் போன ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/22/36)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி](https://minnambalam.com/k/2019/05/21/93)

**

.

**

[எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/05/22/43)

**

.

**

[பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!](https://minnambalam.com/k/2019/05/22/67)

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *