செய்தியாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 56 ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோர் இன்று(ஏப்ரல் 8) அங்கு சென்றனர்.
பிரேமலதா பேசும்போது, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் குறிப்பிட்டார். இதற்கு அங்கிருந்த பிற ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரேமலதா மற்றும் சுதீஷ் அங்கிருந்து கிளம்பிய பின்னர், செய்தியாளர்கள் மீது தேமுதிக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
**ஸ்டாலின் வருத்தம்**
இதேபோல், காவிரி உரிமை மீட்பு பயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் திருச்சி முக்கொம்பில் நேற்று தொடங்கினார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கை முறிந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட மு.க.ஸ்டாலின் அந்தச் செய்தியாளரை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.�,