வெங்காய விலையுயர்வைத் தடுக்க, அவற்றுக்குக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால், தற்போதையக்கு அந்தத் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெங்காயம் இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து அவற்றின் விலை சந்தைகளில் சரியத் தொடங்கியது. அதிக ஆர்டர்கள் குவிந்துள்ளதால் இன்னும் 15 முதல் 20 நாட்களுக்கு வெங்காய இறக்குமதி குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெங்காயம் விலை உள்நாட்டில் உயராமல் இருக்கும். அதன் பின்னர் காரிஃப் பருவ அறுவடை முடிவடைந்து சந்தைக்கு வெங்காய வரத்து வரத் தொடங்கும். இதனால் வெங்காயம் விலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். வெங்காய விலையுயர்வைக் கண்காணிப்பதற்காக வர்த்தக, வேளாண், நுகர்வோர், பொது விநியோக அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள் அமைச்சகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் வெங்காய விலையுயர்வைக் கட்டுப்படுத்தக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதை தற்போது நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான தேவை ஏற்படும் பட்சத்தில் அடிப்படை விலை நிர்ணயிக்கப்படும் என்று உள் அமைச்சகக் குழுவும் தெரிவித்துள்ளது.
”வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அந்தந்த மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் வர்த்தகர்கள் மற்றும் மொத்த விற்பனைகளை அளவுக்கு அதிகமான வெங்காயத்தை இருப்பு வைக்காதவாறு கண்காணிக்க வேண்டும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ராம் விலாஸ் பஸ்வான் செய்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,