கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்திற்கான பொது விசாரணைகள் சாகர்மாலா திட்டத்திற்கான கண்துடைப்பு நாடகங்களே எனக் கூறித் தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை வருகிறது. இந்த அறிவிப்பாணையின்படி இந்தியக் கடற்கரைகளும் மற்றும் அந்தமான் நிக்கோபா் தீவுகளின் கடற்கரைகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையின்படி கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டங்களைக் கடற்கரை மாநிலங்கள் தயாரிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள 9 கடற்கரை மாநிலங்களில் சில மாநிலங்கள் இத்திட்டங்களைத் தயாரிக்கவில்லை. இத்திட்டங்கள் குறித்துப் போதிய அக்கறையையும் காட்டுவதில்லை. கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டங்களின்படி கடற்கரைகளில் விதிகளை மீறி வளர்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா? கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளனவா? எந்தக் கடற்கரை பகுதிகளில் விதிகள் மீறப்பட்டுள்ளன? என்பதைக் கண்காணித்து அவ்வாறு மீறும் இடங்களில் குறிக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் எந்த மீறலும் இதுவரை குறிக்கப்படவில்லை.
தற்போது கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையானது திருத்தப்பட்டு அது கடற்கரை மண்டல மேலாண்மையாக மாற்றப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய திட்டமான சாகர்மாலா என்ற சரக்கு கப்பல் போக்குவரத்துத் திட்டத்திற்கான கடற்கரை நிலங்களைப் பெறுவதற்கு முன்னேற்பாடாகும் என்று மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.
சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக அரசு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை இணையதளத்தில் முன்வைத்து மீனவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டங்கள் தொடர்பாக மீனவர்கள் தங்களது எதிர்ப்புக் கருத்துகளைக் கேட்டிருந்தனா். ஆனால் இந்தக் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் இத்திட்டங்களுக்கான பொது விசாரணை நடத்துவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய கடற்கரை மாவட்டங்களின் மீனவர் அமைப்புகள் பொது விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவை மீனவர்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு நடத்தப்படும் வெறும் கண்துடைப்’பு நாடகம் என்று அவர்கள் கூறியுள்ளனா்.
�,