‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை’ என்று கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் மதுரை மேலூரில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று திங்கட்கிழமை (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி தலைமை தாங்கினார். இதில் நாஞ்சில் சம்பத், கர்நாடகா அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய புகழேந்தி, “டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடும் என்ற பயத்தில்தான் அவரை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஏன் புகைப்படத்தை வெளியிடவில்லை என கேட்கிறார்கள். ஜெயலலிதா சிகிக்சைக்காக அப்போலோவில் இருந்தபோதே 300 பேர் உயிரிழந்தாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை” எனவும் விமர்சனம் செய்துள்ளார்.�,