மதுரையில் மேம்பால விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
மதுரை நத்தம் சாலையில் மதுரை – செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் கடந்த 28ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று(செப்டம்பர் 1) நடைபெற்ற சட்டப்பேரவையில் மதுரையில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அதிமுக, திமுக, மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை,”இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதுதொடர்பாக பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ”மதுரை பாலத்திற்கான முழு நிதியையும் ஒன்றிய அரசுதான் வழங்குகிறது. தற்போதுவரை 70சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து நடந்தது. ஒப்பந்ததாரரின் கவன குறைவு தான் விபத்திற்கு முழு காரணம். இந்த விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய திருச்சி ஐஐடியை சேர்ந்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
மேலும், மதுரை மேம்பால விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
**-வினிதா**
�,