மகுடஞ்சாவடி தேர்தல் அலுவலரைக் கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக எம்.பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், வேட்புமனு பரிசீலனையில் பல மாவட்டங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 5ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் பழனியம்மாள் என்பவர் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். வேட்புமனு பரிசீலனையின்போது முதலில் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த தேர்தல் நடத்தும் அலுவலர், பின்னர் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி திமுகவினர் மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரை சந்தித்து திமுகவினர் முறையிட முயன்றுள்ளனர். ஆனால், அவர்களை சந்திக்க ஆட்சியர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (டிசம்பர் 20) திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆட்சியர் வரும்வரை இந்த பகுதியை விட்டு நாங்கள் செல்லமாட்டோம் என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மகுடஞ்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபோலவே பல தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும், திமுக தரும் மனுக்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினர்.�,