ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி. ஜோஷியின் கோரிக்கையை இன்று (ஜூலை 23) உச்ச நீதிமன்ற நிராகரித்துவிட்டது. சபாநாயகர் சி.பி. ஜோஷி அம்மாநில உயர் நீதிமன்றத்துக்கு எதிராக தொடுத்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தில் உயர் நீதிமன்றம் குறுக்கிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் சபாநாயகர்.
இந்த வழக்கில் ராஜஸ்தான் சபாநாயகருக்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானர். “கட்சி மாறுவது தொடர்பான விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிப்பதும், அதை நீட்டிப்பதும் நீதிமன்றம் செய்யக் கூடியவை அல்ல. இது நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வராது. அரசியலமைப்பு சாசனத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ் வரும் இந்த செயல்முறைகளில் நீதிமன்றத்துக்கு தொடர்பில்லை. தகுதி நீக்கமோ, சஸ்பெண்ட் நடவடிக்கையோ சபாநாயகர் செய்ததற்குப் பிறகுதான் நீதிமன்றம் தலையிட முடியும்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி, “ஜனநாயகத்தில் மாற்றுக் குரல்களை மூடலாமா?” என்று கேட்டார். அதற்கு கபில் சிபல், “ஜனநாயகக் குரல்களை கட்சிக்குள் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பக்கத்து மாநிலமான ஹரியானா மாநிலத்தில் உள்ள ரிசார்ட்டில் அமர்ந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்க்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் மீது ஆளுங்கட்சிப் புகார் செய்ததன் அடிப்படையில் சபாநாயகர் அவர்களிடம் பதில் கேட்டிருக்கிறார். பதிலை சபாநாயகரிடம் சொல்ல வேண்டிய அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சபாநாயகர் தகுதிநீக்க முடிவை ஒரு கால எல்லைக்குள் தீர்மானிக்கும்படி கேட்கலாம். ஆனால் சபாநாயகரின் செயல்முறையில் தலையிட முடியாது. மேலும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தல் அல்லது இடைநீக்கம் செய்வது குறித்த முடிவுக்கு முன்னர் சபாநாயகரை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்று வாதிட்டார் கபில் சிபல்.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கபில் சிபலிடம், “ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சபாநாயகரிடம் நடவடிக்கையை குறிப்பிட்ட தேதி வரை தள்ளிவைக்குமாறு வேண்டுகோள்தானே விடுத்துள்ளது?” என்று கேட்டனர். அதற்கு கபில் சிபல், “உயர் நீதிமன்றம் உத்தரவில் வழிகாட்டுதல் என்ற வார்த்தை உள்ளது. அதை நீக்குங்கள். சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்ய முடியாது” என்று பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், “வேண்டுதலோ, வழிகாட்டுதலோ உங்களுக்கு வார்த்தைதான் பிரச்சினையா?” என்று கேட்டனர். மேலும் இந்த விவகாரம் நீண்ட விசாரணைக்குரியது என்றனர். அதற்கு கபில் சிபல், “விசாரணை நடத்தலாம். ஆனால் சபாநாயகருக்கு நீதிமன்றம் வழிகாட்டுதல் என்பதற்கு தடை விதியுங்கள்” என்று கோரினார்.
பல கேள்விகளைக் கேட்ட நிலையில், இது ஒரு எளிய விஷயம் அல்ல, இந்த எம்எல்ஏக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது. இந்த பின்னணியில் சபாநாயகரால் தகுதி நீக்கம் அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ராஜஸ்தான் சபாநாயகரின் மனு மீதான விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதற்கிடையே நாளை (ஜூலை 24) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைல்ட் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
**-ஆரா**�,”