கொரோனாவின் இரண்டாவது அலை முடியும் முன்பே , மூன்றாவது அலையை சமாளிக்க தயாராகுங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை அதிகமான பாதிப்புகளையும், இறப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. முதல் அலைக்கு இணை நோய் உள்ளவர்களே அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், தற்போதைய அலையில் நடுத்தர வர்க்கத்தினரும், ஊரக பகுதிகளிலுள்ள மக்களும் அதிகளவில் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
டெல்லிக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று(மே 6) மீண்டும் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தது. அப்போது, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும். மூன்றாவது அலை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே வரவிருப்பதாகவும், இது குழந்தைகளை பெரிய அளவில் தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்று குழந்தைகளை தாக்கும்போது, அவர்களை தாயும், தந்தையும்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இதனால் அனைத்து தரப்பினரையும் வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி பயன்பாட்டை அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதனை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை கையாண்டு, தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்றுநோய் நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும், பயிற்சி முடித்த மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
**வினிதா**
.�,