குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா விவசாயப் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறப்பது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்ததாலும் 2012க்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பின் இன்று (ஜூன் 12) வழக்கமான தேதியில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் 8 கண் மதகு பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியை வணங்கி மலர்த்தூவி தண்ணீரை திறந்துவிட்டார். நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், சரோஜா, கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மேட்டூர் அணையில் 300 நாட்களுக்கு மேலாக 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. அணை திறப்பின் மூலம் 5,22,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அதில் 3.25 ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடிக்கான பாசன வசதியைப் பெறும். மேட்டூர் அணை திறப்பின் மூலம் 4 தொகுதிகளிலுள்ள 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் வேகப்படுத்தப்படும். 90 நாட்கள் வரை அணையிலிருந்து நீர் திறக்கப்படும். கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
அணையிலிருந்து முதல் கட்டமாக 2,000 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியிலேயே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
**எழில்**�,