அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், 2017ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அப்போதைய தலைவர் அமித்ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை கடந்த ஆண்டு செப்டம்பரில் நியமனம் செய்யப்பட்ட சூழலில், புதிய மாநிலத் தலைவர் லிஸ்டில் நயினார் நாகேந்திரன் பெயரும் இருந்தது. ஆனால், தேசிய தலைமையால் எல்.முருகன் மாநிலத் தலைவரால் நியமிக்கப்பட்டார். தலைவர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பொதுச் செயலாளர் போன்ற முக்கியமான பதவி வழங்கப்படும் என நயினார் எதிர்பார்த்தார்.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான புதிய நிர்வாகிகள் பட்டியலில், மீண்டும் துணைத் தலைவர் இடத்திலேயே நயினார் பெயர் இருந்தது. தான் ஆசைப்பட்ட, எதிர்பார்த்த இரண்டு பதவிகளும் கிடைக்காததால், அவர் பாஜகவிலிருந்து இடம் மாறத் தயாராகி வருகிறார் என்று [பாஜகவிலிருந்து நகர்கிறார் நயினார்](https://minnambalam.com/politics/2020/07/25/25/nayinar-nagendran-moves-from-bjp-dmk-admk) என்ற தலைப்பில் நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவலறிந்து, திருநெல்வேலியிலுள்ள அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று சந்தித்தார் முருகன். அங்கேயே மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, சுமார் இரண்டு மணி நேரம் அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
“உங்களப் பத்தி டெல்லி தலைமைகிட்ட பேசியிருக்கேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்…குறிப்பா உங்களுக்கு ராஜ்யசபா கொடுக்கலாம்னு கூட சொல்லிருக்கேன். இந்த நேரத்தில நீங்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துறாதீங்க” என்று நயினாரின் வருத்தங்களை போக்கும் வகையில் முருகனின் பேச்சு இருந்திருக்கிறது. இதனால் வேறு முகாமுக்கு மாறும் தனது நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனையில் இருக்கிறார் நயினார்.
**எழில்**
�,