அதிமுகவினர் டோக்கன் வழங்குவதாக திமுக பொய் சொல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் திமுகவும், தமிழகத்தை சீரமைப்போம் என மக்கள் நீதி மய்யமும் துவங்கிவிட்டன. இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்டையாம்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர், “கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். ஆனால், அதிமுகவினர் வீடு வீடாக சென்று பரிசு டோக்கன் வழங்குகிறார்கள் என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
மக்களிடம் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும், அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறது திமுக எனவும் குறிப்பிட்ட முதல்வர், கடந்த ஆண்டும் இதேபோலதான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மக்களுக்கு நல்லது செய்வது எதுவுமே திமுகவுக்கு பிடிக்காது என விமர்சித்தார். தொடர்ந்து திறந்த வேனில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
**எழில்**
�,