ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்?: உச்ச நீதிமன்றம்!

politics

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் தன்னை விடுதலை செய்யக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த மார்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் மே 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு வரும் மே 10ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படவில்லை என்றால் உச்சநீதிமன்றமே முடிவெடுத்து அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் இவ்வழக்கு மீண்டும் இன்று(மே 11) நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நாகேஸ்வரராவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மாநில அரசின் முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கும்போது ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம். ஆனால் இவ்வழக்கில் எந்த விதியின் கீழ் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் இதுதொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதால் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, “பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் சார்பில் மத்திய அரசு வாதிடுவது ஏன், மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் வாதாடுவது ஏன்? ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர மத்திய அரசு வாதிடக் கூடாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தபோது, விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் அமைச்சரவையின் முடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே? பேரறிவாளன் விவகாரம் இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? அப்படியானால் கடந்த 75 ஆண்டுகளில் ஆளுநர்கள் வழங்கிய கருணை மன்னிப்பு செல்லாதா? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு சார்பில், ”புலனாய்வுத் துறை மத்திய அரசின் அதிகாரத்தில் வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில், “பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் ஆளுநர் அரசியல் சாசன பிழையைச் செய்துவிட்டார். ஒரு நபரை விடுவிக்கவோ/ விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் ஆளுநரால் முடிவெடுக்க முடியாது. அமைச்சரவை முடிவிற்கு அவர் கட்டுப்பட்டவர்” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *