கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவி 4-வது அலை வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது ஆனால் 4ஆவது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர் அகர்வால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பில்லை. பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிவதில்லை. இதன் காரணமாக நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் மக்கள் சற்று கவனக்குறைவாக இருக்கிறார்கள். கொரோனா தற்போது அதிகரித்து இருப்பதற்கு இது தான் முக்கிய காரணம் ஆகும்.” என்று கூறினார்.
கொரோனா நான்காவது அலை இந்தியாவில் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், “கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் 4ஆவது அலை வருமோ என்று அச்சப்பட தேவை இல்லை. தற்போதைய நிலவரப்படி 4ஆவது அலைக்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான். நாடு முழுவதும் மக்களிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. 90 சதவீத பேரிடம் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. எனவே கொரோனா எத்தகைய வடிவத்துடன் உருமாற்றம் பெற்று வந்தாலும் அதிகளவு பரவ வாய்ப்பில்லை.” என்று தெரிவித்தார்.
ஒரு புறம் நான்காம் அலை வரும் என்கிறார்கள், மற்றொரு புறம் வராது என்கிறார்கள். என்னவாயிருப்பினும் நாம் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம். கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டிருந்தாலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், வெளியே சென்று வந்தவுடன் கைகள், கால்களை கழுவுதல் போன்றவற்றை நாம் தொடர்ந்து சில நாட்களுக்கு பின்பற்றினால் கொரோனாவை முற்றிலுமாக வென்று விடலாம்.
.