ஸ்டாலின் துபாய் பயணம்: எதிர்க்கும் அண்ணாமலை- வரவேற்கும் வானதி

politics

முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அபுதாபி ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது 5000 கோடி ரூபாய் இங்கிருந்து சென்றுள்ளது, ஸ்டாலின் குடும்பத்தினர் மூலம் இந்த பணம் வெளிநாடுகளில் தவறான முறையில் முதலீடு செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவருமான வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தில் அண்ணாமலையின் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறார்.

இன்று மார்ச் 26ஆம் தேதி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “பாரத பிரதமர் மோடி இதேபோல வெளிநாடுகளுக்குச் சென்று வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரவேண்டும், உறவுகளை மேம்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பல்வேறு நாடுகளுக்கு போனார்.
அப்போதெல்லாம் பிரதமரை விமர்சனம் செய்தது திமுக.

இப்போது அவர்கள் தலைவர் வெளிநாட்டுக்கு போகிறார். ஆனால் இப்போது நான் அவர்களை விமர்சனம் செய்யவில்லை. தயவுசெய்து போய் வாருங்கள். அவர் துபாய்க்கு மட்டுமல்ல இன்னும் பல்வேறு நாடுகளுக்குப் போய் தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை கொண்டு வரட்டும். தமிழக முதல்வர் தமிழகத்தின் பெருமைகளை வெளியில் எடுத்துச் செல்வதும் தமிழராக எல்லாருக்கும்தான் பெருமை.

ஆனால் டீம் இந்தியா… ஒட்டுமொத்தமாக இந்தியா முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை”என்று கூறினார் வானதி சீனிவாசன்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *