தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு சில மணித்துளிகள் முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்பிசி க்கான 20%இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டு வழங்க சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அதிமுக பாமக கூட்டணி எஃகுவான நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன் என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.
அதில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையை ஆனந்தக் கண்ணீரில் நனைந்து கொண்டு தான் எழுதுகிறேன். மருத்துவர் அன்புமணி இராமதாசும் கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் இருக்கிறார். சட்டப்பேரவையில் இடப்பங்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட போது, ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். அவரது அழுகையை நிறுத்தவைக்க என்னாலும் முடியவில்லை. சரிப்பா…. சரிப்பா என்று தேற்றினேன். எங்களின் ஆனந்தக் கண்ணீருக்குக் காரணம்… மிக மிக மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பது தான்.
இ்ரண்டரை கோடிக்கும் கூடுதலான வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அவர்களின் சமூகநிலையும் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளை அனுபவிக்க முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த அந்த அப்பாவி ஊமை சனங்களுக்கு உரிய சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் 40 ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறேன். வன்னியர் சமுதாயமும் என் தலைமையை ஏற்றுக் கொண்டு போராடி வருகிறது. எனது 40 ஆண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு இந்த சட்டத்தின் மூலம் தான் மனநிறைவு அளிக்கும் வகையில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.,
மேலும், “ வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல”என்று அவற்றைப் பட்டியலிட்ட ராமதாஸ், கடந்த ஆண்டில் இருந்து தமிழக அரசுடன் பாமக நடத்திய பேச்சுவார்த்தைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், “ 3 கட்டங்களாக தமிழக அரசு குழு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குழுவினரிடையே பேச்சுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நான், மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜி.கே. மணி உள்ளிட்டோருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையே பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். நடப்பாண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்காகத் தான் 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்.
வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமது கோரிக்கையாகும். இது குறித்து தமிழக அரசிடமும் வலியுறுத்தி உள்ளோம். அரசும் அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறது. சட்டப்பேரவையிலும் இந்த உத்தரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் இன்று மாலை தொடர்புகொண்டு நன்றி சொன்ன ராமதாஸ்… “வன்னியர்கள் இடப்பங்கீட்டுக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், இதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு, சட்டப்பேரவையில் இன்று இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படுவதை சாத்தியமாக்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கும் வன்னியர் சங்கம், பா.ம.க மற்றும் இரண்டரை கோடி வன்னியர்களின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
**-வேந்தன்**�,