வேளாண்மை சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (ஜனவரி 11) மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் போனில் உரையாடியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு ஜனவரி 11 ஆம்தேதி விசாரிக்கப்பட்டபோது,
“ வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால், அதை நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. ஏனென்றால் சிக்கலைத் தீர்க்க தவறிவிட்டீர்கள். புதிய வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட விளைவு தற்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், “விவசாயிகளுக்கு இந்த சட்டம் நன்மை பயக்கிறது என ஒரு மனு கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சட்டத்தை நிறுத்திவைத்தால் , பேச்சு வார்த்தை சிறப்பாக நடக்கும்” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்து போராடும் விவசாயிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இது தொடர்பாக போனில் பேசத் தொடங்கினார், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுதும் கூர்மைப்படுத்த எதிர்க்கட்சிகளைக் கூட்டி ஒரு செயல் திட்டத்தை வகுக்கவே சோனியா இந்த உரையாடலை நடத்தியிருக்கிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேநேரம் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக இடது சாரித் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
வேளாண் சட்டங்கள் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கருத்து பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்கள், “இடைக்காலத் தடை எல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. மூன்று சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் உறுதியான கோரிக்கை”என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,