சரியான சாப்பாடு இல்லை: இலங்கையிலிருந்து திரும்பிய மீனவர்கள்!

politics

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

கடந்த 2021 டிசம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். இவர்களில் 56 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு கொழும்புவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை வரவேற்ற தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் தனித்தனி வேன்களில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த டிசம்பர் மாதம் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் படகுகளை முட்டி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.

சிறைச்சாலையில் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள் சரியான சாப்பாடு கூட போடவில்லை. உயிர் வாழவேண்டும் என்பதால் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மிகச் சிரமப்பட்டு இன்று தமிழகம் வந்திருக்கிறோம்.

நாங்கள் கஷ்டப்பட்டு வந்து விட்டோம். அதுபோன்று மேலும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் மீட்டுக் கொண்டுவர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கெனவே 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *