முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடலுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கருப்புத் துண்டு அணிந்து அஞ்சலி செலுத்தினார்.
முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு வந்தார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரிக்குச் சென்ற அவர் உயர் ராணுவ அலுவலர்களிடம், விபத்து குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று வெலிங்டன் மருத்துவமனையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டது. துக்கத்தை அனுசரிக்கும் வகையில் கருப்புத் துண்டு அணிந்து கொண்டு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிகா ராவத் மற்றும் உயிரிழந்த அதிகாரிகளுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, விமானப் படை தலைமை அதிகாரி வி.ஆர்.சவுத்திரி, கப்பற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஹரிகுமார், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
**-பிரியா**
�,