தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 16 ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
வழக்கமாக மாநில முதல்வர்கள் பதவியேற்றுக் கொண்டதும் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமரை சந்தித்துப் பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் தமிழக முதல்வராக மே 7 ஆம் தேதி பொறுப்பேற்ற ஸ்டாலின், கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டியதால் ஆட்சி மாற்றத்துக்குப் பின் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடுகளில் கூட கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு கொரோனா தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வரும் ஜூன் 16 ஆம் தேதி டெல்லிக்கு சென்று அங்கே குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரயும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறை டெல்லி பயணம் என்பதால் இது தமிழ்நாட்டுக்கு அரசு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பி வரும் சசிகலா தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் தினத்துக்காகத்தான் காத்திருக்கிறார். மோடி-ஸ்டாலின் நேருக்கு நேர் சந்தித்த பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீதான ஒன்றிய அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார் சசிகலா. பாஜக-திமுக ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையிலான இணக்கத்திலும் இந்த பயணம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்குப் பின் தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஆரம்பமாகலாம்
**-வேந்தன்**
[ஸ்டாலின் -மோடி சந்திப்பு: காத்திருக்கும் சசிகலா](https://minnambalam.com/2021/05/14/17)
�,