கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில், நடைபெற்ற ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நான் எங்குச் சென்றாலும் இளைஞர்கள் என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை நான் இப்போது ஏற்கிறேன் என்று தெரிவித்தார். இதன்மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதியானது.
இந்நிலையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இளைஞர்களை இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்த குறுகிய காலத்தில் புதிய கட்சியை உருவாக்கி, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக் கடினமாக உள்ளது. எனவே பொதுவான ஒரு தளத்தில் இயங்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எங்களது இளைஞர்களைத் தேர்தல் களத்தில் இறங்க அனுமதிக்கிறோம்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் இணைந்து நாங்கள் கூட்டணியை அமைத்திருக்கிறோம். இது தற்காலிக ஏற்பாடு. தமிழ்நாடு இளைஞர் கட்சி சின்னத்தில் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்” என்று தெரிவித்தார்.
20 தொகுதிகளில் இளைஞர்கள் போட்டியிடுவதாகவும், முதற்கட்டமாக 10 வேட்பாளர்கள் பெயரை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி,
கடலூர் – சி.புஷ்பராஜ்,
அண்ணா நகர்- எஸ்.பி.பிரபாகர்
ஆவடி – பாலசுப்பிரமணியன்
ஆலந்தூர் – கமலக்கண்ணன்
விருத்தாசலம்: கேசவ பெருமாள்
மதுரை மேற்கு -நாகஜோதி
ஓமலூர் – கருணாகரன்
மயிலாடுதுறை – ராஜ்குமார்
கவுண்டம்பாளையம் – சிவா
கோவை வடக்கு -துரை ராஜ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் சகாயத்தின் இந்த அறிவிப்பு இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
**-பிரியா**
�,