‘விக்ரம்’ படம் வெளியான சில தினங்களில் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார். தற்போது முதல் வாரம் முடிந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் விக்ரம் படத்தின் விஸ்வரூப வெற்றியை கண்டு அதற்கு காரணமான கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வீடியோ மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழர்கள் இல்லாத நாடு இல்லை, தேன் மதுர தமிழ் ஓசை ஒலிக்காத ஊர் இல்லை என்னும் அளவுக்கு உலகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும், உலக தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த பிரம்மாண்டமான வெற்றியை எனக்கு பரிசளித்த தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த சினிமாக்களின் மூலம் தொடர்ந்து உங்களை எண்டெர்டெயின் செய்வதுதான் நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில் நன்றி என்பதை நான் அறிவேன். அதைச் செய்வேன். உயிரே, உறவே, தமிழே, நன்றி இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
**- அம்பலவாணன்**