நடிகர் விக்னேஷ் சிவன் அஜித்துடன் அடுத்த படத்தில் இணைவதற்கு முன்பு நயன்தாராவுடன் திருமணம் என தகவல் வந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி என பலரும் நடித்திருக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படம் இன்னும் ரெண்டு நாட்களில் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் படத்திற்காக சமீபத்தில் ஊடகங்களுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நயன்தாராவுடன் திருமணம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். ‘’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் எனக்கும் நயன்தாராவுக்கும் ரொம்பவே ஸ்பெஷலான ஒரு திரைப்படம். ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்திற்கு முன்பே இந்த கதையை நான் தயார் செய்து விட்டேன். நயன்தாராவிடம் இந்த கதையை அப்போது சொன்ன போதே அவருக்கும் பிடித்திருந்தது. இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று அப்போதெல்லாம் பேசி கொண்டோம். அந்த வகையில் படம் இப்போது கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து வெளிவருவதில் மகிழ்ச்சி’ என பேசியுள்ளார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறார்கள். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் இந்த வாரம் வெளியாவதை ஒட்டி இந்த வருடம் ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் இருவரும் முறைப்படி அறிவிப்பார்கள். திரையுலக பிரபலங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்வார்களா அல்லது இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்வார்களா என்பது விரைவில் தெரியவரும்.
**ஆதிரா**