சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை தயாரித்த ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.சரா , ஜி.சரவணா தயாரிக்க, ராசுமதுரவன், மனோஜ்குமார், தருண் கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் தண்ணிவண்டி
நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ராமைய்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ஸ்கிருதி மற்றும் பாலசரவணன், தம்பிராமைய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லரை சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று மாலை (மார்ச் 26) சென்னை,செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், “ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம் புரொடக்ஷன் நீண்ட காலமாக படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. அந்த நிறுவனம் காலமாற்றத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு தற்போது ஓடிடி தளத்தில் கால் பதிக்கிறார்கள் என்றால் இது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான் கூட ஓடிடி தளம் துவங்குவேன். எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம்.
அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம். தியேட்டரில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரயிலில் கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ்,இருக்கு. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு! இது என்ன சர்வாதிகார நாடா? இல்ல ஜனநாயக நாடா? டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்?. டிக்கெட் ரேட் தான் அதிகமென்றால் பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய், 70 ரூபாய் தான் டிக்கெட்.
டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் இங்குயாருக்கும் துணிவில்லை? மனமில்லை? டிக்கெட் விலையை குறைத்தால் சிறியபடங்கள் வாழும். நாங்கள் ஏன் லோக்கல் வரி எட்டு சதவிகிதம் கட்ட வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறோம். படம் பார்க்க மக்கள் 50% தான் வரணும். ஆனால் ஜி.எஸ்.டி மட்டும் முழுமையாக செலுத்த வேண்டும் என்பது எப்படி நியாயமாகும் என்றார் டி.ராஜேந்தர்
**-இராமானுஜம்**
�,