�‘சூப்பரான கலந்த சாத வகைகளை சமையற்கலை வல்லுநர்களால்தான் செய்ய முடியுமா..? வீட்டுல மணக்க மணக்க செய்ய முடியாதா..?’ என்று ஏங்குபவர்கள் அநேகர். அப்படிப்பட்டவர்கள் ‘அதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஈஸி’ என்று இந்த கிராமத்து கீரை பருப்பு சாதத்தை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
**என்ன தேவை?**
அரிசி – 400 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2 (நடுவில் கீறியது)
சாம்பார் பொடி – தேவைக்கேற்ப
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
**ஒன்றிரண்டாக அரைக்க**
சீரகம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 7 பல்
**எப்படிச் செய்வது?**
அரிசி, பருப்பை 15 நிமிடங்கள் ஊறவிடவும். கீரையை நறுக்கிவைக்கவும். ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, வதங்கும்போதே ஒன்றிரண்டாக அரைத்த கலவையைச் சேர்க்கவும். பிறகு சாம்பார் பொடி, கீரை, மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி, அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து நெய் சேர்த்துப் புரட்டிப் பரிமாறவும்.
**குறிப்பு**
அகத்திக்கீரை, புளிச்சகீரை தவிர்த்து எல்லாக் கீரையிலும் செய்யலாம். லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற ரெசிப்பி.
[நேற்றைய ரெசிப்பி: சுரைக்காய் தோசை](https://www.minnambalam.com/k/2020/12/10/1)�,