ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவு -777 சார்லி கதை!

entertainment

‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே ‘777 சார்லி’.

ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (மே 30) சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி பிலிம்ஸ், சக்தி வேலன் கூறுகையில், “கார்த்திக் சுப்ராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லபிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்த படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்” என்றார்

இயக்குனர் கிரண்ராஜ், “நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். இந்த படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்த படத்தை துவங்கினோம். ரக்‌ஷித் ஷெட்டி கதையை கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் என கூறினார். நடிகர்கள் ரக்‌ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்த படத்துக்காக கொடுத்துள்ளனர். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. இந்த படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ் படம் என்றுதான் கூறுவீர்கள்” என்றார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்‌ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குனர் கிரண்ராஜுக்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தில் நாய் காட்சியை எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. இந்த படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை. இந்த படம் பார்த்த பின்னர் வாழ்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது” என கூறினார்.

நடிகர் எஸ் ஜே சூர்யா கூறுகையில்,”நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தை விட படத்தில் பணியாற்றிய நாய், படக்குழு மற்றும் இயக்குனருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இயக்குனர் உடைய ஆர்வம் தான் இந்த படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்த படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவறவிடமாட்டார்கள். இந்த படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்

777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வழங்குகிறார்கள்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *